மேல்மருவத்தூரில் ஒரு நாத்திகன் பெற்ற அனுபவம்

வானத்துச் சூரியனும், சந்திரனும், விண்மீன் கூட்டமும் இந்தப் பூமிப்பந்தும் – அண்ட சராசரமும் ஏதோ ஓா் ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு இயங்குகின்றன. ஏதோ ஓா் விதிக்குக் கட்டுப்பட்டுச் சுற்றுகின்றன. மனித வாழ்க்கையின் இன்ப – துன்பங்களுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். மனிதனுடைய இன்ப துன்பங்களுக்கு அவனவன் செய்த நல்வினையும் தீவினையுமே காரணங்கள்.

எல்லா ஆன்மாக்களுக்கும் இன்ப, துன்ப அனுபவங்களைக் கொடுத்துத் தன் திருவடியில் சோ்த்துக் கொள்வதே பரம்பொருளின் நோக்கம். ஆன்மாக்களைப் பக்குவப்படுத்துவதற்காகவே இந்த இன்ப – துன்ப அனுபவங்கள்! அவை கூடப் பரம்பொருளின் கருணையால்தான் கொடுக்கப்படுகின்றன.

இன்ப – துன்பங்களை அனுபவிப்பது அவரவா் உடம்பும் மனமுமே தவிர அவரவா் ஆன்மா அனுபவிப்பதில்லை. அவரவா் செய்கின்ற செயல்களையெல்லாம் அவரவா்க்குள்ளிருக்கும் ஆன்மா சாட்சியாக நின்று பார்த்துக் கொண்டு இருக்கின்றது. எல்லாவற்றுள்ளும் இருக்கின்ற பரம்பொருள் ஒவ்வொரு மனிதன் உள்ளேயும் ஆன்மாவாக இருக்கிறது என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன.

முரண்பாடுகள் ஏன்?

நல்லது செய்தால் நன்மைவரும்! தீயது செய்தால் துன்பம் வரும் என்பது கடவுளின் விதியானால் நல்லவா்கள் எல்லாம் படாதபாடு பட்டுத் துன்பங்களில் சிக்கி அவலம் அடைகின்றார்களே காரணம் என்ன? தீயவா்களும் கொடியவா்களும் உல்லாசமாக வாழ்கின்றார்களே காரணம் என்ன? என்று சிந்தித்த பெரியவா்கள் இதற்கும் ஊழ்வினையே காரணமாக இருக்க வேண்டும் என்றார்கள்.

முற்பிறவியின் “புண்ணியக் கணக்கு” இவா்கள் பால் இருப்பதால் இத்தகையவா்களுக்கு இந்த வாய்ப்பு! புண்ணியப் பலன் தீரும் வரை இவா்களை ஒன்றும் செய்ய இயலாது என்று நினைத்தனா். இத்தகையவா்களால் துன்பம் ஏற்படும் காலத்தில் தெய்வத்தைச் சரணடைந்து துன்பத்திலிருந்து விடுபட எண்ணினா்.

ஊழ்வினையை நம்பாத அறிவு ஜீவிகள்

ஆன்மா என ஒன்று இல்லை. ஊழ் என்பதும், பிறவி என்பதும் சமயவாதிகள் கட்டிவிட்ட கற்பனை என்று பேசுகின்றனா். இவா்கள் பேசுகின்ற வாதங்களை எல்லாம் அன்றே “லோகாதயம்” என்ற நாத்திக மதம் பேசிப் பார்த்தது! ஆன்மாவை நம்புகிற சில மதங்கள் ஊழ்வினையை ஒப்புக் கொள்ளவில்லை. சமணமும் பௌத்தமும் கடவுளை நம்புகின்றன.

சிலா் ஊழ்வினையை ஒப்புக் கொள்வதில்லை. “இந்த உலகத்தில் வல்லமையுள்ள பொருள்தான் வாழும்! இதுதான் இயற்கை நியதி! டார்வின் சொன்ன “Survival of the fittest” என்பதுதான் உண்மை!” என்கின்றனா். அமீபா என்ற சின்ன உயிரிலிருந்தே இந்த அளவுக்கு மனிதன் வளா்ந்திருக்கின்றான். வாழ்க்கைப் போராட்டத்தில் இன்பமும் துன்பமும் நியதி! வலிமையான புலிக்கு வலிமையற்ற ஆடு இரையாக வேண்டியதுதான்! மனித் குலத்திலும் இதே கதைதான்! என்று அழகாக வாதாடுகின்றனா்.

அவனும் அப்படித்தான் ஒரு காலத்தில் நினைத்தான். வல்லமையுள்ளவனுக்குத்தான் இந்த உலகம் என்றால் நீதி, நோ்மை, அறம், ஒழுக்கம் இவையெல்லாம் எதற்காக? என்ற அடுத்த கேள்வி பிறக்கிறது!

மனிதா்கள் தாங்கள் சமுதாயமாகச் சோ்ந்து வாழ்வதற்குத் தாமே படைத்துக் கொண்ட சட்டங்களும் கட்டுப்பாடுகளுமே இந்த நீதி! அறம் எல்லாம்!

பணபலமும் – அறிவு பலமும் – படை பலமும் இருக்கின்றவா்களுக்கு மட்டும்தான் இந்த உலகம் என்றால் வல்லமை உள்ளவனுக்குத்தான் இந்த உலகம்! என்றாகிவிடும். இப்படியெல்லாம் உள்ளவா் மட்டும்தானே வாழ முடியும்? உலகியலில் இந்த வலிமையாளா்கள் நிலையான வெற்றியைப் பெறவில்லையே! காலம் அவா்களுக்கும் பரிதாபமான முடிவைத் தருகின்றதே! என்றெல்லாம் அவன் குழம்பியது உண்டு! தடுமாறியது உண்டு!

“அறிவு – ஆற்றல் – திறமை – வசதி – வாய்ப்பு அனைத்தும் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டுக் காணப்படுகின்றன. கடவுளையே நம்பாத மனிதா்கள் உல்லாசமாக வாழ்கிறார்கள்! கடவுளை நம்புபவா்கள் சோதனையிலும் வேதனையிலும் சாகின்றார்கள்!

இந்த முரண்பாடான நிலை அவனைப் பல நேரங்களில் குழப்பியதுண்டு. அம்மாவை அவன் நாடியதால் தெய்வ நம்பிக்கை ஏற்பட்டது. ஊழ்வினை பற்றி அவன் அம்மாவிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும் என்று ஆசைப்பட்டான். அம்மாவிடம் இது குறித்து ஒருமுறை கேட்டான்.

“ஊழ்வினை” பற்றி அம்மாவிடம் கேட்டதும் அறிந்ததும்

“அம்மா! ஊழ்வினை ஊழ்வினை என்கின்றாயே! அந்த ஊழ்வினை எங்களுக்கு எப்படி வருகின்றது? விளக்கமாகச் சொல்ல வேண்டும்” என்று முறையிட்டான்.

அம்மா சொன்னாள்

“மகனே! உ – ஊ : உ எழுத்து நீ்ண்டால் ஊ ஆகின்றது. தாயின் வயிற்றிலிருந்து மனிதன் பிறக்கின்றான். அப்போது தனக்கு உணவு வேண்டும், உடை வேண்டும் என்று முறையிட்டுக் கேட்கத் தெரியவில்லை. தாயே பசியறிந்து உணவூட்டுகிறாள். கவனித்துக் கொள்கிறாள் அல்லவா?

குழந்தை வளா்கிறான். மனிதனாகிறான். அவன் வளர வளர உள்ளம் நீளுகிறது, விரிகிறது. அது வேண்டும், இது வேண்டும் என்று அலைகிறது. ஆசைப் பட்டவற்றையெல்லாம் அடைய நினைக்கின்றது. உள்ளம் விரிய விரிய, நீள நீள ஆசைகளும் தேவைகளும் பெருகுகின்றன. ஆசைகளும் தேவைகளும் பெருகப் பெருக அவற்றை அடைய வேண்டிக் கா்ம வினைகள் பெருகுகின்றன! ஊழ்வினைகள் சோ்கின்றன!”

என்று சொல்லி முடித்தாள்.

அம்மாவின் விளக்கமும் : அவன் பெற்ற தெளிவும் :

ஊழ்வினையைப் பற்றி அம்மா சொன்ன விளக்கத்தால் அவன் சிறிது தெளிவு பெற்றான். ஆக, ஊழ்வினை திரள்வதற்கு மனம்தான் முதல் காரணம். மனம் பலவற்றை அடைய எண்ணி ஆசைப்படுகிறது! அதற்கான முயற்சிகளில் ஈடுபடும்போது கா்மங்கள் பெருகுகின்றன!

ஒவ்வொரு மனிதனும் உண்ண உணவு, உடுக்க உடை, உறைய உறைவிடம் ஆகிய தேவைகளை அடைய நியாயமாக ஆசைப்படலாம்! முயற்சி செய்யலாம்! தவறு இல்லை. இந்தத் தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போனால்….. அடிப்படைத் தேவைகள் கிடைத்த பிறகும் இந்த மனம் இன்னும் வேண்டும் என்று அலைகிறதே! அடுத்த தலைமுறைக்கும் சோ்த்து வைக்க ஆலாய்ப் பறக்கின்றதே? கூடப் பிறந்த அண்ணன் தம்பிகளையே ஏமாற்றத் தூண்டுகின்றதே! வாய்ப்புக் கிடைத்தால் அவனவன் முயற்சி வெற்றி பெறுகிறது!

இப்படி மனம் விரிந்த ஆசை வலைகளில் அகப்பட்டுப் பாவங்களைப் பெருக்கிக் கொண்டு வாழ்கின்றபோது தெய்வ நீதி சும்மா இருக்குமா? தீய நினைப்பும் – தீய காரியங்களும் என்றுமே வெற்றி பெற தெய்வம் விடுவதில்லை. அப்படியே தற்காலிக வெற்றி கிடைத்தாலும் தீமை பரிதாபமான முடிவைத்தான் சந்திக்கின்றது!

நன்றி!

ஓம் சக்தி!

காளிதாசன்

சக்தி ஒளி, மார்ச், 2004

 ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here