உலகம் முழுவதிலுமிருந்து மேல்மருவத்தூருக்கு இருமுடி எடுத்து வந்து கருவறையில் உள்ள சுயம்பு அன்னைக்கு அபிஷேகம் செய்கின்றனர். 3, 5 நாட்கள் விரதமிருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் குடும்பம், குடும்பமாக வந்து அன்னைக்கு இருமுடி செலுத்துவது வழக்கமாக உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச ஜோதிவிழாவிற்கு முன்பாக கார்த்திகை மாதம் தொடங்கி சக்தி மாலை அணிந்து, சக்தி விரதம் இருப்பார்கள்.

இந்த ஆண்டு இருமுடி விழா இன்று (13/12/2017) தொடங்கி வரும் ஜனவரி மாதம் 30ம் தேதி செவ்வாய் கிழமை வரை தொடர்ந்து நடைபெறுகிறது. அடுத்த நாளான 31ம் தேதி புதன் கிழமை அன்று ஆன்மீக குரு அருள்திரு அம்மா அவர்கள் பங்கேற்கும் தைப்பூச ஜோதி ஏற்றும் விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இன்று அதிகாலை 3மணியளவில் மங்கள் இசையுடன் இருமுடி விழா தொடங்கியது. 4மணிக்கு கருவறை மண்டபத்தில் இயற்கை வழிபாடு நடைபெற்றது. காலை 6மணிக்கு அபிஷேகத்தை மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆன்மீக இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். 9 சிறுமிகள் அபிஷேகம் செய்ததை தொடர்ந்து பக்தர்கள் அபிஷேகம் செய்தனர்.
இருமுடி விழாவினை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தகவல் நிலையங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், முதலுதவி சிகிச்சை மையம், சுற்றுப்புற சுகாதார ஏற்பாடுகள், பாதுகாப்பு முதலிய அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் செவ்வாடைத் தொண்டர்கள், பல்வேறு பணிகளில் ஈடுபாட்டுடன் தொண்டு செய்து வருகிறார்கள். இன்று தொடங்கி விழா முடியும் வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சுமார் 50 லட்சம் பக்தர்களுக்கு மேல் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக செய்தி தொடர்பாளர் கே.வி. முருகானந்தம் தெரிவித்தார்.
விழா ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், துணைத் தலைவர் கோ.ப. செந்தில்குமார் மற்றும் ஸ்ரீதேவி ரமேஷ் பொறுப்பில் இயக்கத்தின் பல்வேறு குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.  இருமுடி விழாவிற்காக தெற்கு ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
]]>