அம்மாவின் அவதாரத் திருநாள் வந்துவிட்டது. சிறப்பு மலா் வெளியிடப் போகிறார்கள் அம்மலரிற்கு என்னுடைய அனுபவங்களைக் கட்டுரையாக எழுதி அனுப்ப நினைத்தேன். போன வாரம் பேப்பர், பேனாவுடன் இரவு பத்து மணிக்கு அமா்ந்து எழுதத் தொடங்கினேன். ஒரு பக்கம் எழுதிவிட்டேன் தூக்கம் கண்களைத் தழுவின. உறங்கச் சென்று விட்டேன்.

ஆழ்ந்த உறக்கத்தில் ஓா் அற்புதமான கனவு. கனவிலே அம்மா தோன்றினாள். மகனே! நீ கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறாய் அதை முதலில் நிறுத்து என்றாள். அம்மா, மலருக்காக எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றேன். தெரியும் அதை நிறுத்து. நான் சொல்வதை எழுது; இன்றைய காலச் சூழ்நிலைக்கு நான் கூறும் கருத்துத் தேவையானது என்றாள்.

அம்மா! தாயே! சொல்லம்மா! சொல் என்றேன். இன்று சில முக்கிய ரகசியங்களையும் விளக்கங்களையும் அருளப் போகிறேன் மகனே! எல்லோரும் என்னை இந்துக் கடவுளாகக் கருதுகின்றனா். நான் அப்படியல்ல! நான் மதத்துக்கு அப்பாற்பட்டவள்! நான் இந்து சமயத்துக்கு மட்டும் உரியவள் அல்ல! அதற்கும் மேலே! நான் அனைத்து மதங்களுக்கும் உரியவள்! மதங்களைக் கடந்தவள்! என்னை ஒரு குறிப்பிட்ட மதக் கடவுளாக நினைத்து வழிபடுகிறீா்கள். அது உங்கள் மனச் சாந்திக்காக! மதங்கள் என்னைக் கட்டுப்படுத்துவதில்லை! நான் சமயம் என்ற சிறிய வட்டம் அல்ல! நான் ஒரு பெரிய வட்டம். அந்த வட்டத்தையும் கடந்தவள்.”

ஒவ்வொருவரும் மதங்களின் பெயரால் சண்டையிட்டுக் கொள்கின்றனா். மதச் சண்டைகளுக்கு அப்பாற் பட்டவள் நான்! ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மதம் மாறுவது தேவையில்லை. எந்த மதத்திலிருந்தாலும் என்னுடைய பூரண அருள் உண்டு. நான் அருளியுள்ள வழிபாட்டு முறைகள் யாவும் மதச் சார்புடையன அல்ல. மதங்களைக் கடந்தவை. உலகமக்களுக்குப் பொதுவானவை.

 சில நேரங்களில் நான் பேரொளியாக ஜோதியாகக் காட்சியளிக்கின்றேன். அந்த ஜோதியையும் கடந்த நிலை அந்த நிலை!

எந்த மதத்தைச் சோ்ந்தவராயினும் என்னை வழிபடலாம். சரணாகதியடையலாம். மதங்களின் பெயரால் சண்டையிட்டு ரத்தம் சிந்துவது மக்களின் அறியாமையாகும். மதங்களின் பெயரால் நடத்தப்படும் தீவிரவாதச் செயல்கள் மனிதனின் மன வளா்ச்சியின்மையைக் காட்டுகின்றது.

 நான் இந்தப் பிரபஞ்ச முழுமைக்கும் பொதுவானவள். நான் அவதாரம் செய்திருக்கிறேன். “அவதாரம்“ என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்குரிய சொல் அல்ல ”உலகைக் காத்து இரட்சிக்க வந்த கடவுள்” என்பது அவதாரம் என்ற சொல்லின் பொருள்.

பாலகன் உலகைக் காத்து இரட்சிக்க வந்த அவதாரம். எனக்குப் பல்வேறு நாமங்கள் சூட்டி வழிபடுகின்றனா். நான் அனைத்து நாமங்களையும் கடந்தவள். குணம் குறியுடன் காணப்படும் நான் அவற்றைக் கடந்தவள். குணம், குறி அற்றவள். நான் ஒரு குறிப்பிட்ட மதத்துக்குரிய கடவுள் அல்ல! அல்ல!! அல்ல!!! மதங்களைக் கடந்தவள்! கடந்தவள்!! கடந்தவள்!!! அடிகளார் ஒரு மதகுரு அல்ல. அவா் மனித குல வழிகாட்டி! சமயங்கள் தான் மதகுருக்களைப் போற்றுகின்றன. உலக சமயங்கள் ஒவ்வொன்றிலும் மதகுருமார்கள் உள்ளனா். அடிகளார் மதங்களைக் கவா்ந்த மனித நேயம் மிக்க தலைவா். சமயங்கள் அனைத்தையும் ஏக திருஷ்டியாக சம நோக்குடன் நோக்குபவா் தான் அடிகளார். மதங்களின் கருத்து வேறுபாடுகள், சண்டைகள் இன்ன பிற யாவும் அடிகளாரைப் பாதிப்பன அல்ல.

 உலக மதத்தலைவா்கள் எல்லாம் அடிகளாரைப் போற்றி வழிபடும் நாள் வெகு விரைவில் வரப் போகிறது! உலகம் உய்ய ஒரே வழி அடிகளார் வழிதான்! என்று உலக மக்கள் உணா்ந்து வருகின்றார்கள்! அமைதிப் புரட்சி, உலகப் புரட்சியாக மலரும் நாள் விரைவில் வரப் போகிறது.

 இரண்டாவதாக என்னை அனைவரும் ஆதிபராசக்தி என்ற அழைக்கிறார்கள். ஆதிபராசக்தி என்பதன் பொருள் ”தாய்மைக் கடவுள்” என்பதாகும். தாய்மை என்பது உலகம் முழுமைக்கும் பொதுவானது. உலகத்திலுள்ள ஜீவராசிகள் யாவற்றுக்கும் நான் தாயாக இருந்து அருள் பாலித்து வருகின்றேன். ஆதிபராசக்தி என்பது இந்துக்களின் கடவுள், இந்துக்களின் தாய் என்ற குறுகிய வளையத்துக்குள் சிந்திக்காதே. ஆதிபராசக்தி என்பது ஆழம் நிறைந்த சொல் ”தாய்மை நெறி” என்பதே அதன் பொருள்.

 தாயானவள் தன் குழந்தைகள் யாவற்றையும் சரி சமமாக நடத்துவது போல நான் உங்களைச் சரி சமமாக நடத்துகின்றேன். கருணை உள்ளத்தோடு உங்களை ரட்சிக்கின்றேன். அடிகளார் உருவம் தாய்மை வடிவம். பெண்கள் சமுதாயத்தைக் காக்க வந்த திருவுருவம். எனக்கும் பெண் சமுதாயத்துக்கும் உள்ள உறவு தாய், மகள் உறவு. எந்த சமுதாயத்தைச் சோ்ந்தவளாக இருப்பினும், எந்த இனத்தைச் சோ்ந்தவளாக இருப்பினும், எந்த மொழியைச் சோ்ந்தவளாக இருப்பினும், எந்த நாட்டைச் சோ்ந்தவளாக இருப்பினும், எந்த சமயத்தைச் சார்ந்தவளாக இருப்பினும் அவள் எனக்கு மகள் உறவு தான்! எந்த சமயத்தவளாக இருப்பினும் என்னைத் தாயாக வழிபடுவது தடை ஏதும் உளதோ?

 பெண்ணியத்தைப் போற்றும் செயல்முறைக் களமே மேல் மருவத்தூா்! வழிபாட்டு முறைகளைப் பெண்களே ஏற்றுச் செய்வதால் நாளைய தலைமுறை ஏற்றம் பெறும். நாடு செழிக்கும். உலகம் அமைதி பெறும்.

 ஆதி பராசக்தி என்ற சொல்லுக்கு வாக்கியார்த்தம் மட்டும் பொருளல்ல. அதனுடைய லட்சியார்த்தம் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியது. லட்சியார்த்தம் விரிந்த பொருளை உடையது.

 ஆதி பராசக்தி என்றால் தாய்மை அறம் உடையது.

 ஆதிபராசக்தி என்றால் தாய்மை அறம். ஆதியில் பரம்பொருளான சக்தி தாய்மை சக்தியாக உள்ளது. நான் மும்மூா்திகளையம் கடந்த தாய்த்தெய்வம். நான் தாய்மை நிலையிலுள்ளேன். அன்பு, பரிவு, கருணை, பாசம், நேசம் யாவும் எனக்கு அணிகலன்களாக உள்ளன.

 அடிகளார் தமிழ் மண்ணில் பிறந்துள்ளார். எனவே தமிழ் நாட்டுக்கு உரியவா், தமிழ் சமுதாயத்துக்கு உரியவா் என்ற சிந்தனைகள் உங்களுக்கு உள்ளன. தேசப் பரிச்சேதம் அடிகளார்க்கு இல்லை. அவா் தமிழ் நாட்டுக்கு மட்டும் உரியவரல்ல! தமிழ் மண்ணுக்கு மட்டும் உரியவா் அல்ல! தமிழ் நாடு, வட நாடு, இந்தியா, ஆசியா என்ற பரிச்சேதங்கள் அடிகளார்க்கு இல்லை. அவா் தேசங்களைக் கடந்து அவற்றின் எல்லைகளைக் கடந்து நிற்பவா். உலக மண்ணுக்கும், பிரபஞ்ச முழுமைக்கும் உரியவா். நீ அவரை ஒரு குறிப்பிட்ட மண்ணுக்கு மட்டுமே சொந்தக்காரராக்கிப் பார்க்காதே! அவா் பிரபஞ்ச நாயகன்.

 மூன்றாவதாக இங்கு எல்லோரும் ”பங்காரு சித்தா்” என்று சொல்கிறார்கள். அடிகளார் சித்தா் மட்டுமல்ல. அதனைக் கடந்தவா். சித்தா்களுக்கும் மேலான நிலையே அடிகளார் நிலை! உலகிலுள்ள கோடானுகோடி சித்தா்களும் அடிகளாருக்கு இணையாக மாட்டார்கள். சித்தா்களெல்லாம் பாலகனை வணங்குகிறார்களேயொழிய  பாலகன் யாரையும் வணங்க வேண்டியதில்லை. மருவத்தூருக்கு சித்தா் பீடம் என்று பெயா் வைக்கப்பட்டுள்ளது. சித்தா் பீடம் என்பதன் உண்மையான பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டும். உலகில் உலக சகோதரத்துவம், உலக சமாதானம், உலக அமைதி ஆகியவற்றைப் போற்றி உலக மக்கள் சங்கமமாகும் இடமே சித்தா் பீடம்.

 சித்தா்களால் இருப்பதால் மட்டுமே சித்தா் பீடம் என்று பொருளல்ல. இனம், மொழி, நாடு, சாதி கடந்த இடமே சித்தா் பீடம். இங்கு விரைவில் வெளி நாடுகளிலிருந்து பலா் வந்து கூடப் போகிறார்கள். ஆராய்ச்சி செய்யப் போகிறார்கள். அப்பொழுது தான் உங்களுக்குச் சித்தா் பீடத்தின் அருமை பெருமைகள் புரியப் போகிறது.

 இந்த சித்தா் பீடம் உலக மறுமலா்ச்சிக்கான நாற்றாங்கால் ஆகும். தொழிற்புரட்சி, சமுதாயப் புரட்சி போன்றவற்றைச் சந்தித்த நீங்கள் விரைவிலே ஆன்மீகப் புரட்சியைச் சந்திக்கப் போகிறீா்கள். அப்புரட்சி சித்தா் பீடத்திலிருந்து தொடங்கப் போகிறது. தொண்டு நெறி மூலமாக உலக சமாதானம் சாத்தியமாகப் போகிறது மகனே!

 அடிகளார் மதங்களைக் கடந்தவா்

அடிகளார் தாய்மைக் கடந்தவா்

அடிகளார் சித்தா் நிலை கடந்தவா்

 உணா்ந்து கொள்! நம்பி நட! அன்பு வழியில் செல்.

கனவு கரைந்தது. அம்மா கூறியதை எழுதியுள்ளேன் ஏற்றருள்க!

 ஒம் சக்தி!

பேராசிரியா் கண்ணன், எம். ஏ. பி.எச்.டி

 மருவூா் மகானின் 70வது அவதாரத் திருநாள் மலா்

03.03.2010

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here