“இருமுடி செலுத்துவது உன்னுடைய அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே! உன்னுடைய உள்ளத்தில் உள்ள அழுக்கு! உன் குடும்பத்தில் உள்ள அழுக்கு! இவ்விரண்டு அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே அந்த இருமுடி! ஒழுக்கம் கட்டுப்பாடு இன்றி நீ செலுத்தும் இருமுடியால்
செலுத்தும் இருமுடியால் பயனில்லை”- என்கிறாள் அன்னை
இரண்டுவிதமான அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே அந்த இருமுடி என்கிறாள் அன்னை ஆதிபராசக்தி. தனிப்பட்ட முறையில் நாம் இந்தப் பிறவியிலும் பழம் பிறவிகளிலும் சேர்த்துக் கொண்ட பாவங்களின் தொகுப்பை ‘ உன் அழுக்கு ‘ என்று குறிப்பிடுகிறாள் அன்னை. இதைத் தவிர நம் குடும்பத்தில் உள்ள முன்னவர்களாலும், குடும்பத் தலைவர்களாலும் திரண்ட பாவங்களின் தொகுதியைக் ‘குடும்ப அழுக்கு’ என்கிறாள் அன்னை ஆதிபராசக்தி.
எத்தனை சமுதாய மாற்றம் ஏற்பட்டாலும், எத்தனை அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அவரவர் பாவ, புண்ணியப் பலன்களை அவரவர்களே அனுபவித்துக் கழிக்க வேண்டும் என்பதே அன்னை ஆதிபராசக்தியின் கருமச்சட்டம்!
இந்தக் கருமச்சட்டத்தைத் தளர்த்தி அன்னை நம் பாவங்களைக் குறைத்தும், தணித்தும் அருள்பாலிக்க வேண்டுமானால் அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டே ஆக வேண்டும்.
“இன்னின்ன பாவங்களை நீக்கிக் கொள்ள வேண்டுமானால் இன்னின்ன பிராயச்சித்தங்களை மேற்கொள்!” என்று அந்தக் கால தரும சாத்திரங்கள் வழி கூறின.
ஆங்கிலக் கல்வியும், தொழில் முன்னேற்றமும், விஞ்ஞான வசதிகளும் ஏற்பட்ட பிறகு பாவ புண்ணியங்களைப் பற்றிய நம்பிக்கைகள் தளர்ந்து விட்டன.பாவமாவது…. புண்ணியமாவது என்று அலட்சியப்படுத்தி விட்டு ஒழுக்கம், கட்டுப்பாடு என்பவற்றைக்
காற்றிலே பறக்கவிட்டு வாழத் தொடங்கியதன் விளைவுகளை உலகம் இப்போது அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறது
உடல் நோய்களின் காரணம்:
“உன் உள்ளம் சுத்தமாக இருந்தால் நோய் வராது” என்கிறாள் அன்னை. தீய எண்ணம் ஒன்று மனத்தில் புகுந்தவுடனே உயிரணு பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் சித்தர்கள். அந்தத்தீய எண்ணம் உடம்பில் நோயாக வெளிப்பட்டுத்தான் கிளம்பியாக வேண்டும். இதற்கு முன் வாழ்ந்த பிறவிகளில் சேர்த்துக் கொண்ட தீய எண்ணங்கள், கர்ம வினைகள் எவ்வளவு என்பதை யார் கண்டார்கள்? சில நோய்களைக் கர்ம நோய்கள் என்றே சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.
நோய் வருவதற்கு என்னென்ன காரணங்கள்? என்று அதர்வண வேதம் கூறுகிறது.
1. முற்பிறவியில் செய்த பாவம்
2. கடவுகளை அவமதித்தல்
3. எதிரிகள் ஏவல், செய்வினைகள்.
4. பல்வேறு வகையான தீய ஆவிகள்
என்கிறது. மற்ற காரணங்களெல்லாம் இரண்டாம் பட்சமான காரணங்களே!
உடல் நோய் மட்டும்தானா பிரச்சனை? வறுமை மட்டும்தானா பிரச்சனை? வறுமையற்ற குடும்பங்களில் எத்தனை எத்தனை பிரச்சனைகள்?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள்! ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள் இருக்கின்றது.சமுதாயத்தாலும் அரசியலாலும் தீர்க்க முடியாத தனிமனிதப் பிரச்சனை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஒவ்வொரு குடும்பத்திற்கும் உண்டு. இந்த பிரச்சனைகளுக்கு மூலகாரணம் புரிந்து கொள்ளாமல்-புரிந்து கொண்டு தவிர்க்க முயற்சிக்காமல் கோயிலுக்கும் போயும் என் குறை தீரவில்லையே என்று புலம்புகிறார்கள்.
குடும்ப அழுக்கு:
குடும்ப அழுக்கை நீக்கிக் கொள்ள ஒருமுடி! என்று அன்னை சொல்கிறாள் அல்லவா? குடும்பத்திற்கேற்றவாறு சில
துன்பங்கள் வந்து நேர்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு பிரச்சனை! பரம்பரை பரம்பரையாகச் சில குடும்பங்களில் பெண் குழந்தைகளே இல்லை. இப்படிச் சில குடும்பங்கள்!
சில பரம்பரைகளில் மூத்த மகன் 40 வயதிற்கு மேல் உயிரோடு இருப்பதில்லை. இப்படிச் சில குடும்பங்கள்! சில குடும்பங்களில் பிறந்த பெண்கள் வாழ்க்கை கண்ணீரும் கம்பலையுமாகவே அமைகிறது.
சில குடும்பங்களில் வருமானம் சொத்து எல்லாம் இருக்கின்றன. அனுபவிக்க முடிவதில்லை.
ஆரோக்கியமான தம்பதிகளுக்கு ஊனமுள்ள பிள்ளைகள் பிறக்கின்றன.
யாரோ இட்ட சாபத்தால் சில குடும்பங்கள் அவதிப்படுகின்றன. எதிரிகளின் பில்லி சூனியத் தொல்லைகளால் சில குடும்பங்கள் அவதிப்படுகின்றன.
தோஷமுள்ள இடங்களில் வீடுகள் கட்டி விபரம் புரியாமல் அதனால் பல துன்பங்களைச் சில குடும்பங்கள் அனுபவிக்கின்றன.
இவற்றையெல்லாம்’ குடும்ப அழுக்குகள் ‘என்கிறாள் அன்னை. குடும்பத்தைச் சூழ்ந்துள்ள பாவங்கள் என்கிறாள் அன்னை.
குடும்பத்தின் துயரங்கள் தீர மக்கள் சோதிடர்களை நாடி ஓடுகிறார்கள். சோதிட சாத்திரங்கள் சில சாபங்களைக் குறிப்பிடுகின்றன.
1. தேவசாபம் 2. விஷ்ணுசாபம் 3. பிரம்ம சாபம் 4. பிதுர் சாபம் 5. நாக சாபம் 6. பெரியோர் சாபம் என்று சில சாபங்களைக் குறிப்பிடுகின்றன. இவற்றுள் பிதுர் சாபம், நாக சாபம் பெரியோர் சாபம் காரணமாக அல்லல்படும் குடும்பங்கள் அதிகம்.
இறந்துபோன முன்னோர்களையும், இறந்துபோன தாய், தகப்பனையும் மறவாமல் போற்றி வழிபட வேண்டும் என்று தரும சாத்திரங்கள் கூறின. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும்
1. தெய்வக்கடன்,2. ரிக்ஷிக் கடன், 3. பிதிர்க்கடன், 4. மனிதர்க்கடன், 5. பூதக்கடன் என்பவற்றுடன் பிறப்பதாகச் சாத்திரங்கள் கூறுகின்றன.
ஒரு இஷ்ட தெய்வத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அன்றாடம் வழிபாடு செய்து தெய்வக் கடனைத் தீர்க்க வேண்டும். உயர்ந்த ரிக்ஷிகளின் உன்னதமான நூல்களைப் படித்தும் பரப்பியும் ரிக்ஷிக்கடனைத் தீர்க்க வேண்டும்..
இறந்த முன்னோர்க்கு சிரார்த்தம், தர்ப்பணம், செய்து நீத்தார் கடன்களைத் தீர்க்க வேண்டும்.
விருந்தினர்க்கு உணவளித்து மனிதர் கடன்களைத் தீர்க்க வேண்டும்.
காக்கை, நாய், போன்ற வாயில்லாத ஜீவன்களுக்கு உணவளித்து பூதக்கடனைத் தீர்க்க வேண்டும். இவற்றையெல்லாம் எத்தனைபேர் பின்பற்றுகிறார்கள்?
இறந்து போன முன்னோர்களுக்கு உரிய முறையில் செய்ய வேண்டிய கடன்களைத் தீர்க்கவில்லையேல் என்னென்ன விபரீதமெல்லாம் ஒரு குடும்பத்திற்கு வரும் என்று கருட புராணம் விரிவாகக் கூறுகிறது.
ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் தோஷங்கள் பல. நவக்கிரகதோஷம் பொது. இது தவிர சர்ப்பதோஷம்,காலசர்ப்பதோஷம்,களத்திரதோஷம் எனப்பல தோஷங்கள் உண்டென்று சோதிட சாத்திரங்கள் கூறுகின்றன.
இவற்றையெல்லாம் குடும்ப அழுக்குகள் எனலாம்.
ஆங்கிலப்படிப்பு- ஆடம்பர மோகம்- தெளிவில்லா அறிவு- காரணமாக நம் முன்னோர் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் இன்றைய மக்கள் அல்லல்படுகின்றார்கள்.
கோயிலுக்குப் போய் வந்தவுடன் குறை தீர்ந்து விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நோகாமல் வினை கழிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இருமுடி விரதத்தின் சிறப்பு:
வினை கழிய என்று கருதுபவர்கள் தன்னை வருத்திக் கொண்டு ஜெபம், விரதம், கட்டுப்பாடு, வழிபாடு மேற்கொண்டு வாழ்ந்தால் வினைகள் தணிய வாய்ப்புண்டு.
இந்தக் கலியுகத்து மக்களின் வினைக் கழிவிற்கு அன்னை ஆதிபராசக்தியின் இந்த அவதார காலத்தில் இருமுடி விரதம் என்ற ஏற்பாட்டை வழங்கியிருக்கிறார்கள்.
ஜந்து நாள் ஒழுங்காக விரதமும், கட்டுப்பாடும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றாள். ஒரு மண்டலம் 48 நாள் என்றெல்லாம் விரதம் மேற்கொண்டு வழுவிப் போவதைவிட ஜந்து நாள் முறையுடன் இரு! என்கிறாள்.
இந்த இருமுடியால் என்னென்ன வாய்ப்புகள் எல்லாம் நமக்குக் கிடைகின்றன. அன்னை ஆதிபராசக்தியின் சுயம்பிற்கு நாமே நம் கைகளால் அபிடேகம் செய்கிற வாய்ப்பு கிடைக்கிறது.
பெண் குலத்திற்கு அன்னை ஆதிபராசக்தி வழங்கியுள்ள ஒரு வரப்பிரசாதம் இந்த இருமுடி! மாதவிலக்கு தடையல்ல என்றும் அன்னை கூறியுள்ளாள். சலுகை வழங்குகிறாள்.
ஒரு முடியில் உள்ள அபிடேகப் பொருட்களைக் கொண்டு நாமே நம் கைகளால் அபிடேகம் செய்கிற புண்ணியம்!
இன்னொரு முடியில் ஏந்தி வருகிற அரிசி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானத்திற்குச் செல்வதால் அன்னதானப் புண்ணியம்!
குரு காணிக்கை செலுத்துவதன் மூலமாக அன்னை ஆதிபராசக்தியின் அருள் வட்டத்திற்குள் நுழைகிற புண்ணியம். அதனால் பல சூட்சமமான பலன்கள்.
உரிய முறையில் விரதம்
இருந்து வருகிற பக்தர்கள் எங்கே தங்குகின்றார்களோ ‘லட்சுமிகரம்’ வந்து பொருந்தும் என்று கூறுகிறாள் என்றால் இருமுடியின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
இருமுடி செலுத்திவிட்டு இந்த மண்ணில் ஈர உடையோடு அங்கப்பிரதட்சணம் வந்து வாருங்கள். இந்த மண்ணின் மகத்துவம் இருமுடி மகத்துவம் உங்களுக்கே புரியும்!
ஏழரை நாட்டுச் சனியன் பிடிப்பில் அகப்பட்டுத் துன்புறுவர்கள் எங்கெங்கோ அலைவதை விட்டு அன்னையிடம் வந்து தொடர்ந்து இருமுடி செலுத்துங்கள்!நீங்கள் செலுத்துகின்ற ஒவ்வொரு இருமுடிக்கும் கட்டாயம் பலன் உண்டு. உரிய காலத்தில் தக்க நேரத்தில் பலன் கொடுக்கும்.
இந்தப் பிறப்பிற்கு மட்டுமல்லாமல் மறுபிறவிக்கும் பலன் கொடுப்பது இருமுடி விரதம்!
வசதியுள்ள குடும்பத்தார் ஏழைச்சிறுவர், சிறுமியர் பத்துப் பேர்க்கு உங்கள் செலவில் மாலை போட்டு அழைத்து வாருங்கள்.
எந்தக் கோயில் போயும் என் குறை தீரவில்லையே என்று புலம்புகிறவர்கள் அந்தப் புலம்பலைவிட்டு இருமுடி ஏந்தி அன்னை கூறியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி வாருங்கள். இது அவதார காலமானதால் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பலனை அளித்துத் தான் அன்னை ஆதிபராசக்தி அனுப்பி வைக்கிறாள்.அன்னை ஆதிபராசக்தி நாடி வந்தவனை வெறுங்கையோடு இந்தப் பெருமாட்டி அனுப்புவதில்லை.
அன்னை ஆதிபராசக்தியின் அவதார காலத்தில் இருமுடி செலுத்துவது இன்றைய மக்களுக்கு வரப்பிரசாதம் பல நாடுகளிலிருந்து இருமுடி செலுத்துவதற்காகவே இங்கு வருகிறார்கள்.
வெளிநாட்டு பக்தர்கள் இருமுடி செலுத்தும் காலம் எது என்று தெரிந்து கொண்டு வந்து இருமுடி செலுத்திவிட்டுப் பயனடைகின்றார்கள். எனவே, இதனைப் படிகின்ற அன்பர்கள், துயரத்தால் வாடுகிற உங்கள் நண்பர்கள், உறவினர்கள், சுற்றத்தார்
எல்லோர்க்கும் இருமுடி பற்றி எடுத்துச் சொல்லி சக்திமாலை அணிவித்து இருமுடியோடு அன்னை ஆதிபராசக்தியிடம் அழைத்து வாருங்கள் அல்லது அனுப்பி வையுங்கள்!
நாம் ஒரு கருவியாக இருந்து எடுத்துச் சொல்வோம்!
இருமுடி நீயும் கட்டிக் கொள்!
இருதிரு வடியைப் பற்றிக் கொள்!
சித்தம் தெளிய வழிதேடு!
சித்தர் உறவை நீ நாடு!
ஓம் சக்தி!
சக்தி மு.சுந்தரேசன் எம்.ஏ., எம்.பில்.
சித்தர் பீடப் புலவர்.
பக்கம்: 29-35.
சக்தி ஒளி நவம்பர் 2019.