ஆன்மிக குருஅருள்திரு பங்காரு அம்மா அவர்களின் தெய்வத்தன்மை

0
1282

உலகத்தில் ஆன்மிகத்தை மையமாக வைத்து பல ஆன்மாக்களுக்கு ஆன்ம முன்னேற்றம் மற்றும் ஆன்மிகத்தில் முன்னேற்றம் ,பெண்களை எல்லா நிலைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காகவே பங்காரு அம்மா என்கிற மானிட உருவத்தில் வந்து இருக்கிறாள் அன்னை ஆதிபராசக்தி.
பங்காரு அம்மா அவர்களின் பேச்சில், பார்வையில், அவர் கை அசைவில்,
அவர் மனத்தில் நிகழும் உணர்வுகளில் அவருக்குள் பதிவாகியிருக்கும் தெய்வ சக்தி மின்சார சக்திபோல் மற்றவர்களுக்குப் பரவுகிறது பக்தியோடு அவரை நெருங்கும்போது நம் மனத்தின் வழியே தெய்வசக்தி மின்சாரம் நம்மில் பதிகிறது.
பக்குவம் மிகுந்தபோது, தான் வேறு பக்தன் வேறு என்றில்லாமல் தானே அவனாய் அவனே தானாய் ஆவதுதான் பராசக்தியின் இயல்பு. இந்த இயல்பை அருள்திருபஙாகாரு அம்மா அவர்களிடம் நாம் காண்கிறோம்.
மனித நேயத்தை ஆய்ந்து மக்கள் புனிதராக வேண்டும். தீயவை செய்தல் மனத்தின் பாற்பட்டதே. பகைவனும், பொறாமை கொண்டவனும் செய்யும் தீமையை விட, ஒரு மனிதனின் தீய மனம் மிகப் பெரிய தீமையைச் செய்துவிடும்.
பெற்றோரும், உற்றாரும் செய்யும் நன்மையைவிட நல்வழிப்பட்ட மனம் ஒருவனுக்குப் பலமடங்கு நன்மைகளைச் செய்யும். எனவே அறிவைக் கொண்டு மனத்தை அறிந்து அதனை நல்
வழிப்படுத்த வேண்டும். இவற்றின்
மூலம் நேர்மை, தூய்மையான அன்பு, சீரிய ஒழுக்கம் ஆகியவை மக்களிடையே வேரூன்றும்.
தன்னைப்போல மற்றவரும்
இன்புற்றிருக்க வேண்டும் என்பது தான் ஒழுக்கத்தின் அடிப்படை நோக்கம். பிறர் மனம் புண்படாமல் பேச வேண்டும். சமுதாயத்தின் நலனை எப்போதும் மனத்தில் கொள்வதே ஒழுக்கம். அறவழியில் நடுநிலையானவர்கள் வாழ்நாள் முழுவதும் புகழ் சூழ்ந்து காணப்படுவர். நீதி, நோ்மை, உண்மை இவற்றை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்.
சத்தியத்தை மதிக்க வேண்டும். உயர் நடத்தையும் உயர் நோக்கமுந்தான் மனிதனை உயர்த்துகின்றன. மனநேர்மை உடல் ஆரோக்கியத்தை உண்டாக்குவது போல ஒருவர் விரும்பும் செயலையும் அதே நேர் வழியில் நிறைவேற்ற உதவுகிறது.
நாம் பேசுவதில் கவனம் தேவை. வார்த்தைகள் அன்பினாலும் பாசத்தினாலும், அமைய வேண்டும்.
நம் கௌரவமும், கருத்துக்களும்
நம் பேச்சில் தான் உள்ளன.
பிரச்சனையில் முடிவெடுப்பது அவசியம். மனித உடலில் எவ்வளவு அங்கங்கள் இருக்கின்றனவோ அவை யாவும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே மனித இயக்கம் தடைப்படாமல் இருக்கும்.
அருள் உண்டானால் அன்பு தழைக்கும். அன்பு மிகுந்தால் இறை அனுபவம் ஏற்படும். அனைத்து உயிர்களும் கடவுளின் அருள் சக்தியால் ஆட்கொண்டவையே.
பசித்தவா்களுக்குப் புசிக்கக் கொடு. இன்றைய உலக சமுதாயத் தேவைக்குரிய புரட்சிகரமான மறுமலா்ச்சிக் கருத்துக்கள் பொதுமக்களிடையே கொண்டு செல்லப்பட வேண்டும்.
உலக மக்கள் ஒரே குலமாதல் வேண்டும். சாதிசமய பூசல்கள் இல்லாத சமநிலைச் சமுதாயம் அமையவேண்டும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. உயிர்கள் மேல் இரக்கமே உயா்வு அடைவதற்கு உயா்ந்த வழியாகும். உலகமெல்லாம் சக்திநெறி ஓங்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்தும் ஆன்மிக குருஅருள்திரு பங்காரு அம்மா அவர்களின் கருத்துக்கள். அவர் வாழ்க்கையில் அவர் நடந்து வந்த பாதையில் கடைப்பிடிக்கப்பட்டவை. அவற்றையே தான் அவர் மக்களுக்கு அருளும்.
அன்னை ஆதிபராசக்தி அருள்வாக்குகள்.
உனக்கு ஆழமான பக்தியிருந்தால் எந்தச் செயலையம் எந்த வடிவிலும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இயற்கை என்ற அன்னை ஆதிபராசக்தியின் அருளை உன் ஆழமான பக்தியின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
ஆசைக்கும் ஓர் அளவு வேண்டும். அளவிற்கு மீறினால் பொறாமையாக மாறும். பொறாமை வரக்கூடாது. அதனால் ஒருவனின் ஆன்ம வளா்ச்சி தடைப்படும்.
நீங்கள் ஒழுங்காக இருந்தால்தான் உங்கள் குடும்பமும் ஒழுங்காக இருக்கும். தெய்வங்களுக்கு விலங்குகளையும், பறவைகளையும் வாகனங்களாகவும், ஆயுதங்களாகவும் வைத்திருக்கிறார்கள். மனிதர்களை வைத்துக் கொள்வதில்லை. ஏன் தெரியுமா?
மனித இனம் நம்ப முடியாத இனம்.
மனிதர்களின் உள்ளத்தின் வேகத்தால் மனிதன் தடம் புரள்கிறான்.
அந்த வேகத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி ஆன்மிகத்திற்கு உண்டு. அந்தச் சக்தி பெருக ஒவ்வொருவரும் சமூகத் தொண்டு செய்ய வேண்டும்.
சமநிலை, தோற்றத்தில் எளிமை, ஆன்மிகமே வாழ்வின் நோக்கம், வழிபாடே அன்றாடக் கடமை என்று இல்லறத்தில் இருந்துகொண்டு துறவுநிலையில் வாழும் தெய்வத்தன்மை கொண்டிருக்கும், உலகத்தையே வாழ்விக்கும் அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் பெருமை சொல்லில் அடங்காது. அவர்களைப் போற்றி வணங்குவதே நம் கடமையாகும்.
இயற்கை தான் பலன் தருகிறது
”இயற்கையினால் தான் பலன் உண்டு. ஆன்மா என்பது ஆழமான கிணறு போன்றது. அதில் பொய்யும், பித்தலாட்டமும் இருக்கக் கூடாது.
ஆறும் இயற்கை தான். கிணறும் இயற்கை தான். ஆன்மாவை ஆழமான கிணறு என்று கொள்ள வேண்டும்.
ஆழமானஒரு கிணற்றிலிருந்து வீடு கட்டவோ, பயிர் வைக்கவோ தண்ணீர்எடுக்கலாம்.
குளத்திலிருந்தும் தண்ணீர் எடுக்கலாம். மின்சாரத்தின் மூலமும் தண்ணீர் எடுக்கலாம்.
உனக்கு ஆழமான பக்தியிருந்தால் எந்தக் காரியத்தையும் எந்த வடிவிலும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இயற்கை என்ற அன்னை ஆதிபராசக்தியின் அருளை,
உன் ஆழமான பக்தியின் மூலம்
பெற்றுக் கொள்ள முடியும்.”
அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு.
நன்றி
டாக்டர். அ. ஆனந்த நடராசன்.
ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்களின் 69 வது அவதாரத்திருநாள் மலர்.