“அன்னை ஆதிபராசக்தி அருளிய மூலமந்திரத்தின் சிறப்புகள்”

0
3548

“அன்னை ஆதிபராசக்தி அருளிய மூலமந்திரத்தின் சிறப்புகள்”

1. நமக்கு நன்மை வரவேண்டுமானால் “மூலமந்திரம்” இடைவிடாமல் கூறவேண்டும். நமது ஒவ்வொரு மூச்சும் “ஓம்சக்தி பராசக்தி” என்றே உட்சென்றும் , வெளியேறுதலும் வேண்டும்.

2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ” மூலமந்திரம்” மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் , தண்டனையை ஏற்பதுவும், பிராயசித்தமும் “மூலமந்திரம்”. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் “ஓம்சக்தி பராசக்தி” என்றே நடக்கவேண்டும் .

3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் “மூலமந்திர ஜெபமே” கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கிலிருந்து விலகிடுவோம். அதுபோல அம்மா நாமம் சொல்லி அந்த ஓம்சக்தி என்னும் நாமாவில் கரைய கரைய அஞ்ஞானம் என்னும் தூக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம்.

4. குருவே எங்களைக் காக்க, எம் அஞ்ஞானத்தை நீக்க, வந்திருக்கும் இந்த நேரத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.

5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது “மூல மந்திரம்”எழுந்து கடமைகளை செய்யும்போதும் சொல்லவேண்டியதும் “மூலமந்திரம்” அந்த நாள் நமக்கு “ஓம்சக்தி” நாளாக இருக்கவேண்டும்.

6. “மூல மந்திர” ஜெபத்தில் நாம் இருந்தால் , நமது கர்ம வினையின்படி ஏதேனும் துக்கமோ , அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு அது பாதிப்பு இன்றி மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும் வரும்.

7. எந்த இடத்திலும், எந்த நிலையிலும் ” மூலமந்திரம்” சொல்லலாம். எங்கும் உணவு உண்ணுமுன் “மூலமந்திரம்” சொல்லிசாப்பிடலாம். இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே!

8.மூலமந்திரம்” எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் “மூலமந்திரம்” சொல்ல மனம் மட்டும் போதும்.
இதைதான் “நா உண்டு, நாமா உண்டு” என்றனர் பெரியோர்கள் .

9. ஒரு வீட்டில் உள்ள பெண் “மூலமந்திரம்” சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். அந்த வீட்டினில் தெய்வீகம் நிறைந்துவிடும். அதுவே கோவிலாகும் .

10. எல்லாவித சாஸ்திர அறிவும் “மூலமந்திரத்தில்” அடங்கும். எல்லாவித நோய்களுக்கும் “மூலமந்திரம்” சிறந்த மருந்து. துன்பங்களுக்கும் அதுவே முடிவு .

11. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அது “மூலமந்திர” ஜெபத்தால் பெற முடியும். “மூலமந்திர” ஜெபத்தினால் வினைகள் எரிந்து, எரிந்து நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கபடும்.

12. நமது பயணத்தில் பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ செல்லும்போதும் “மூலமந்திரம்” சொல்லலாம். அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

13. பெண்களின் இயற்கை உபாதை நாட்களிலும் “மூலமந்திரம்” சொல்லுவதன் மூலம் அந்த பிரபஞ்ச சக்தியிடமே அடைக்கலமாகிறோம். “மூலமந்திரம்” சொல்ல எந்த ஒரு விதியும் இல்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.
பெண்கள் சமைக்கும்பொழுது “மூலமந்திரம்” சொல்லி சமைத்தால், அந்த உணவே அன்னையின் பிரசாதமாகி …. அதை உண்பவருக்கு தூய குணங்களையும் , நோயற்ற தன்மையையும் அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள் இருப்பின் குணமாகும்.

14. ” மூலமந்திரம்” உரக்க சொல்லுங்கள். காற்றில்
” மூலமந்திர” நாம அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும்.
சுற்றியுள்ள மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள் எல்லாம் “மூலமந்திரம்” கேட்டு கேட்டு ….. அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை பெறலாம். இதுவும் தொண்டே! யார் அறிவர்? நமது முந்தைய பிறவிகளில் நாமும் “மூலமந்திரம்” கேட்டு கேட்டு இப்போதைய பிறவியினை பெற ஏதேனும் ஒரு பக்தரின் வீட்டருகில் மரமாய், ..செடியாய் …பறவையாய் ….விலங்காய் இருந்தோமோ ! என்னவோ …….. அப்புண்ணிய பலனை ….. நம் அன்னை ஆதிபராசக்தியே அறிவாள்!

” மூலமந்திரம்” சொல்வோம் !
அன்னை ஆதிபராசக்தியின் அருளைப் பெறுவோம்!