என் பெயர் சக்தி கௌரி பாலகுமார்

0
1247

நான் சுவிட்ஸர்லாந்து நாட்டில் வசிக்கிறேன். (ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்)அம்மாவின் பக்தர்களாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மேல்மருவதூர் ஆதிபராசக்தி சித்தர் பீடதிற்கு குடும்பத்துடன் வருகிறோம்.

அம்மா என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார்கள்.
அப்படி சமீபத்தில் எனக்கு அம்மாவின் அருளால் தீராத நோய் நீங்க பெற்ற அனுபவத்தை அனைவரிடத்திலும் பகிர விரும்புகிறேன்.

எனக்கு கடந்த ஆண்டு வயிற்றில் பித்த பையில் கல் இருந்ததால் பித்த பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்த பின்பு மிகுந்த வலியும், வேதனையையும் அனுபவித்தி வந்தேன்.

அதன் பின்பு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் சதை வளர்ந்த படியே இருந்தது. நானும் தொடர்ந்து மருத்துவமனை சென்று அதற்கான சிகிச்சை பெற்று வந்தேன். குணம் ஆகவில்லை.

சமீபத்தில் நவராத்திரி விழாவில் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என்ற எண்ணம் என்னுள் வந்த படியே இருந்தது. எப்படியும் இந்த ஆண்டு இருமுடி செலுத்த சித்தர் பீடம் செல்ல இருக்கிறோம், நவராத்திரி காப்பு அபிஷேகம் செய்யாமல் இருந்து விடலாம் என அலட்சியமாக இருந்தேன்.

மற்றொரு புறம்
எப்படியாவது நவராத்திரி காப்பு மற்றும் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று என் மனதில் எண்ணம் தோன்றியது. வீட்டில் பண தட்டுப்பாடு இருந்த போதும் சிரமப்பட்டு எப்படியோ ஒரு வழியாக நவராத்திரி காப்பு அபிஷேகதிற்கு பணம் கட்டி விட்டேன்.

நவராத்திரி விழா முடிந்து காப்பு பிரசாதம் வந்தது. அந்த காப்பு பிரசாதத்தில் வந்த குங்குமத்தை எடுத்து என் வயிற்றில் வைத்த படியே இருந்தேன் அம்மா எப்படியாவது எனக்கு ஏற்பட்ட துன்பத்தை போக்கிவிடு என்று அம்மாவிடம் மனமார வேண்டி வழிபாடு செய்து வந்தேன்.

9 நாட்கள் நவராத்திரி காப்பு பிரசாதத்தை அம்மா கூறிய அருள்வாக்கு படி அதனை வீட்டில் வைத்து வழிபாடு செய்து விட்டு கடலில் விட்டுவிட்டேன்.

அம்மாவின் அருளால் சதை வளர்ந்தது தானாகவே நீங்கி கொஞ்சம் கொஞ்சமாக குணமாவதை உணர்தேன். அம்மாவின் அருளால் தற்போது முழுமையாக குணம் அடைந்தேன்.

அதன் பின்பு என் கனவில் அம்மா இந்த நவராத்திரி விழா காப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டமையால் என் தீராத நோய் குணம் ஆனதை உணர்த்தினார்கள். அது மட்டுமின்றி இந்த நோய் என் ஊழ் வினையின் காரணமாக வந்து துன்பத்தை அனுபவிக்க வேண்டி இருந்தது என்பதையும் அம்மா என் கனவில் உணர்த்தினார்கள்.

இதன் மூலம் அனைவருக்கும் நான் கூற விரும்புவது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெறும் ஒவ்வொறு விழாவும் நம் நலனுக்காக, நம் துன்பம் நீங்க, பிறவிப் பிணியை போக்க நம் கருணைக்கடல் அம்மா அவர்கள் நமக்காக ஒவ்வொரு விழாவையும் நடத்தி வருகிறார்கள்.

இந்த பொன்னான வாய்ப்பினை நாம் பயன் படுத்தி, நம் சித்தர் பீட விழாக்களில் தவறாமல் கலந்து கொண்டு, பக்தியுடன், தொண்டாற்றி நம் வினை நீங்கி அம்மாவின் அருளாசியை பெறுவோமாக என அனைவரிடத்திலும் வேண்டிக் கேட்டு கொள்கிறேன்.

நன்றி!

ஓம்சக்தி!