அன்னை ஆதிபராசக்தியை வழிபட ஆரம்ப நாட்களில் ஆலயத்தில் 108 மந்திரங்கள், வேண்டுதற்கூறு, சக்தி வழிபாடு போன்றன கூட்டு வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. அன்னை ஆதிபராசக்திக்கு 1008 போற்றி மலர்கள் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஆலயப்புலவர்கள் ஒருவருக்கு
உதிக்க அவர் அம்முயற்சியில் ஈடுபட்டார்.எந்த சாஸ்திரமும், மந்திரங்களும் தெரியாத அவர் அன்னை ஆதிபராசக்தி விட்ட வழியென சிறுகச் சிறுக இரகசியமாக எழுதி வந்தார். இவர் மந்திரங்களை எழுதிக் கொண்டிருந்த வேளை ஒரு நாள் ஆலயத்திற்குச் சென்றிருந்தார். அன்று அன்னை ஆதிபராசக்தி மந்திரிப்பு நல்கிக் கொண்டிருந்தாள். இவரும் அதில் ஒருவராய்ப் போய் நின்றார். அன்னை ஆதிபராசக்தி இவரை நோக்கி மகனே 1008 போற்றியை விரைவில் முடி என்றாள்.

பரமரகசியமாக இருந்த தம் முயற்சியை அன்னை அறிந்து கொண்டிருக்கிறாள். எனக் கண்ட அப்புலவருக்கோ கரைகாணா ஆனந்தம். இவ்வானந்தத்தோடே மிகுதி மந்திரங்களையும் எழுதி முடித்து
அன்னை ஆதிபராசக்தியின் திருவடியில் சமர்ப்பிக்க அன்னை ஆதிபராசக்தி மற்றொரு புலவரையும் அழைத்து
“இதில் திருத்தங்கள் சில செய்ய வேண்டியுள்ளது. இருவரும் சேர்ந்து திருத்தங்கள் செய்து எடுத்து வாருங்கள்” என்றாள்.

மீண்டும் திருத்தங்கள் செய்யப்பட்டு அன்னை ஆதிபராசக்தியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அப்புத்தகத்தைப் பிரித்துப் பார்க்காமலேயே அன்னை ஆதிபராசக்தி சில குறிப்பிட்ட எண்ணுக்குரிய மந்திரங்களைப் படிக்கக் கூறி அம்மந்திரங்களை அன்னை ஆதிபராசக்தியே திருத்திக் கொடுத்து வேப்பிலையைத் தூவி இம்மந்திரநூலை ஏற்றுக் கொண்டாள்.மற்றுமொரு ஆலயப்புலவர் அன்னைக்காக 1008 போற்றி மந்திரங்களை எழுதியுள்ளதாகவும், அதற்கு அன்னை ஆதிபராசக்தியின் ஆசி வேண்டும் என வேண்டி நிற்க அன்னை ஆதிபராசக்தி அதனையும் வேப்பிலையைத் தூவி 1008 போற்றித் திருவுருவாக ஏற்றுக்கொண்டாள்:

எல்லையிலாக் கருணையோடு மானிட குலத்தை உய்விக்க வேண்டி அவதார நோக்கம் கொண்டு வந்த அன்னை ஆதிபராசக்தி நாத்திகம் பேசிய இரண்டு பிள்ளைகளைத் தன் காலடியில் இழுத்துப் போட்டுக் கொண்டு அவர்கள் கைகளாலேயே மந்திரங்கள் எழுத வைத்து, அதற்கான காப்புச் செய்யுளாகத் தன் திருவாயாலேயே வெளியிட்ட மந்திரம் தான் இந்த மூல மந்திரம்!

“ஓம் சக்தியே பராசக்தியே
ஓம் சக்தியே ஆதிபராசக்தியே
ஓம் சக்தியே மருவூர் அரசியே
ஓம் சக்தியே ஓம் விநாயகா
ஓம் சக்தியே ஓம் காமாட்சியே
ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே”

இதனாலேயே அன்னை ஆதிபராசக்தி புலவர்கள் எழுதிய 1008 போற்றி மலருக்கும் 1008 போற்றித் திருவுருக்கும் காப்புச்செய்யுளாக இம் மந்திரத்தை அருளினாள். இந்தக் காப்பே மூல மந்திரமாக ஓதப்படுகிறது,
இந்த மூல மந்திரம் பரம்பொருளான அன்னை ஆதிபராசக்தி அருளிய மூலமந்திரம்! தேவர்க்கும், மூவர்க்கும் யோகிகட்கும் எளிதில்
புலப்படாத அவள் மேல்மருவத்தூரில் வந்து கருணையோடு வெளிப்படுத்திய மந்திரம் அது!

லட்சக்கணக்கான ஆன்மாக்களோடு உறவாட வேண்டி அருள் வாக்கு அளித்து, மகனே! மகளே! என்று பாசத்தைப் பொழிந்து, ஈர்த்துக் கொண்ட அவள், பிற்காலத்தே தன் பக்தர்கள் உருவேற்றி நலம் பெறவும், தன் அருள் பெறவும், ஆன்மிக சாதனையில் ஈடுபடவும், ஆபத்துக் காலங்களில் துணைபுரியவும் அருளிய மூல மந்திரம் அது!

காப்புச் செய்யுளாக மூல மந்திரத்தை அருளிய அன்னை ஆதிபராசக்தி ஓம் பங்காரு காமாட்சியே! என்ற மந்திரத்திற்கு விளக்கம் அளித்தாள். ஆதியில் தான் காஞ்சியில் காமாட்சியாக இருந்ததையும் பாதியில் தான் பங்காரு காமாட்சியாகத் தஞ்சையில் எழுந்தருளிய குறிப்பையும் அன்று புலப்படுத்தினாள்.

அன்னை ஆதிபராசக்தியை வழிபட வேண்டுதற்கூறு, 108 போற்றி உரு பாடல்களே இருந்தன. அதன் பின் அம்மா 1008 மந்திரங்களை இயற்ற வைத்தாள்.

அன்னையவள் அருளிய மந்திரங்களுள் விசேட மந்திரங்களாக 1008 போற்றி மலர்களும், 1008 போற்றித் திருவுருவும் கருதப்படுகின்றன.

அன்னை ஆதிபராசக்தியை வழிபட்டு அருள்பெற வேண்டி 1008 மந்திரங்கள், 108 மந்திரங்கள் அனைத்தும் தமிழில் உள்ளது மிகப்பெரிய சிறப்பாகும்.

“1008 போற்றி மலர்களை செவ்வாய்க்கிழமை வழிபாட்டுக்கு வைத்துக்கொள்!”
“1008 போற்றித் திருவுருவை வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு வைத்துக்கொள்” என்று அன்னை அருளினாள்.
இவற்றைக் கொண்டு மந்திர வழிபாடு செய்வது எப்படி என்பதை சொல்லிக் கொடுத்தாள்.

1008 போற்றித் திருவுருவைப் படிக்கிறவர்களை சந்நிதியின் முன்பாக வடதிசை நோக்கி அமர வைத்தாள். 1008 போற்றி மலர் படிப்பவர்களைத் தென் திசை நோக்கி அமர வைத்தாள்.
கருவறையில் சுயம்பின் கீழிருந்து எலுமிச்சம் பழம் எடுத்துவரச் சொல்லி, மந்திரம்
படிப்பவர் முன் கற்பூர ஆராதனை காட்டி எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழிக்க வேண்டும்.

அன்னை ஆதிபராசக்தி அருளிய மந்திரம் படிக்கும் போது கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள்:

1. ஒவ்வொரு வரிசையிலும் ஒற்றைபடையில் எண்கள் வருமாறு தொண்டர்கள் அமர வேண்டும்.

2. ஒருவர் உடம்பு மற்றொருவர் உடம்பின் மேல் படாதவாறு இடைவெளியிட்டு அமர்தல் வேண்டும்.

3. மந்திரம் படிக்கும் போது முதுகு வளையாமல் உடம்பு ஆடாமல் நிமிர்ந்து உட்கார்ந்தபடி மந்திரம் படிக்க வேண்டும். உடம்பில் எந்தச் சேட்டையும் கூடாது.

4. மந்திர வழிபாட்டுக்கு அனைவரும் அமர்ந்ததும்., அன்னைக்குக் கற்பூர தீபாராதனை காட்டிப் பின்பு மந்திர வழிபாட்டில் கலந்து கொண்டுள்ளவர்களுக்கு தீபாராதனை காட்டி அவர்களைச் சுற்றி வந்து தீபாராதனை செய்து, அவர்களுக்கும் எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழிக்க வேண்டும்.

5. மூல மந்திரத்தோடு 1008 மந்திரங்களைத் தொடங்க வேண்டும். பின் 108 சொல்லி முடிக்க வேண்டும்.

6. ஒவ்வொரு மந்திரமும் சொல்லி முடிக்கும் போது ‘ஓம்’ என்ற பிரணவ ஒலியுடன் கையால் அடிக்கும் மணியின் ஒலியும் இணைந்து முடிய வேண்டும்.

7. ஆயிரம் மந்திரம் வந்ததும் பிரம்மதாளம், மணி ஒலி, மிகுந்த முழக்கத்துடன் ஒலிக்கப்படவேண்டும்.

8. 1008 மந்திரங்களும் சொல்லி முடித்த பிறகு 108 மந்திரம் சொல்ல வேண்டும்.
இறுதியில் மந்திர வழிபாட்டில் கலந்து கொண்ட அன்பர்கள் எல்லோரும் வரிசையாக நின்று,ஒவ்வொருவராக எதிரில் இருப்பவரை நோக்கி, ஓம் சக்தி சொல்லிக் குனிந்து, அவர் காலைத்தொட்டு வணங்க வேண்டும். பெண்கள் குனிய வேண்டாம். நின்றபடி ஓம் சக்தி என்று
கைகூப்பித் தொழுதால் போதும்.

9. 1008 மந்திரங்கள் சொல்லி வழிபாடு நடக்கிற நேரத்தில் மந்திரம் படிக்கிற சிலருக்குத் தொண்டை கம்மிக் கொள்ளலாம். மந்திர வழிபாட்டில் தொய்வு ஏற்படலாம்.அப்படிப்பட்ட நேரங்களில் பூசனிக்காய் திருஷ்டி கழிக்க வேண்டும். இல்லையேல் எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழிக்க வேண்டும்.

10.”மந்திரங்களை ஒரு மனதுடன் படித்து வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு ஒரு மனத்தோடுபடிகிறபோது நீங்களும் சக்தி மயமாக ஆகி விடுகிறீர்கள் மகனே! “என்பது அன்னையின் அருள்வாக்கு.

11. மந்திரம் படிக்கிறபோது உனக்கு மூக்குக் கண்ணாடி எதற்கு? கைகளில் மோதிரம் எதற்கு? என்று சிலரை அன்னை ஆதிபராசக்தி கேட்பது உண்டு. பார்வையில் பழுதுள்ளவர்கள் எழுத்து தெரியாதவர்கள் எப்படிப் படிப்பது என்று கேட்கலாம். அத்தகையவர்கள் வேறு வழியில்லாத நிலையில் மூக்குக் கண்ணாடி அணியலாம்.

“நீ ஒழுங்காக, ஒருமனத்துடன் மந்திரம் படித்தால் உன் மங்கலான பார்வையும் குணமாகிவிடும்.” என்பதை உணர்த்துவதற்காகவோ என்னவோ, உனக்கு மூக்குக் கண்ணாடி எதற்கு? என்று அன்னை கேட்டாள்.
மந்திரத்தின் முழுமையான பலனைப் பெறவேண்டுமானால்,

“எவன் ஒருவன் இந்த 1008 மந்திரங்களை விடியற்காலை 3 மணிக்குஎழுந்து இந்த மந்திரங்களைத் தூய்மையுடனும், பயபக்தியுடனும், மன ஒருமைப்பாட்டுடனும், 1008 நாட்கள் தொடர்ந்து படித்து வருகிறானோ அவனையும் அவனுடைய சந்ததியையும் நான் காப்பாற்றுவேன் மகனே!” என்று சொல்லிக் காட்டினாள் அன்னை ஆதிபராசக்தி.

“இம் மந்திரங்களை எந்த இடத்திலிருந்து படித்தாலும் அந்த இடம்
தூய்மை அடையும்”என்பது அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு.

ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள் காட்டும் பாதையில் அனுதினமும் அன்னை ஆதிபராசக்தியின் “1008, 108 மந்திரங்களை தினமும் படித்து வழிபட்டு அருள்திருஅம்மா அவர்களின் அருளைப் பெறுவோமாக!”

ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா!
உலகமெலாம் சக்திநெறி ஓங்க வேண்டும்!!
ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!

ஓம் சக்தி

நன்றி
சக்தி ஒளி.