சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அன்னையின் தொண்டர் அவருக்கு ஏதோ சில பிரச்சனைகள்! அன்னையிடம் மூன்று முறை அருள்வாக்கு கேட்டார். ஒவ்வொரு முறையும் அன்னை கூறினாள். “மகனே! இந்த மண்ணை மிதித்துவிட்ட உனக்கு என் அருள் எப்போதும் உண்டு! நீ என் பணிகளைச் செய்! உன் பணிகளை நான் கவனித்துக் கொள்கிறேன்” என்றாள். அம்மா சொன்னதையே சொல்கிறதே, நம் பிரச்சனைகள் தீர்வதற்கு வழி சொல்லவில்லையே என்ற மனக்குறை அவருக்கு! ஒரு நண்பரிடம் குறைபட்டுக் கொண்டார். “இன்னொரு முறை விளக்கமாகக் கேட்டுவிட வேண்டியது தானே… ஏன் தயக்கம்?” என்றார் அவர் நண்பர். நான்காவது முறையாக அருள்வாக்கு கேட்டபோதும் அன்னை சொன்னதையே திருப்பிச் சொன்னாள். “அம்மா! நான் உன்னிடம் வரும்போதெல்லாம் நீ இதே வார்த்தைகளைத் தானே சொல்கிறாய்?” என்றார். உடனே அன்னை அவரைப் பார்த்து, “உனக்கு என்ன சொன்னாலும் ஏறாதடா மகனே ! ஏறுகிற வகையில் சொல்கிறேன் கேள்!” என்று சொல்லி அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தாள். அன்னை கேட்டதும் அவர் சொன்ன பதில்களும் வருமாறு: “பலமாடிக் கட்டடங்களில் தண்ணீரைத் தேக்கி வைப்பதற்கு என்னடா இருக்கும்?” “தண்ணீர்த்தொட்டி இருக்கும் தாயே!” “சரிடா மகனே! அதிலே தேக்கி வைத்திருக்கும் தண்ணீரை ஒவ்வொரு தளத்திற்கும் அனுப்புவதற்கு என்னடா இருக்கும்?” “குழாய்கள் இருக்கும் தாயே!” “சரி! ஒரே சமயத்தில் அத்தனை தளத்தில் இருப்பவனும் குழாயைத் திறந்தால் என்னடா நடக்கும்?” “தண்ணீர் வரும் தாயே!” -இப்படி அவர் பதில் சொன்னதும் அன்னை, “இந்த இடத்தில் தான் உனக்கு ஏறவில்லை. நீ சொன்னது போல் தண்ணீர் வரும். ஆனால் தரைமட்டத்தில் இருக்கிற தளத்திற்குத் தான் அதிகத் தண்ணீர் வரும். உயர உயர தண்ணீரின் வேகம் குறைந்துவிடுமடா மகனே!” என்றாள் அன்னை. மேலும்,” நான் எல்லோருக்கும் அருள் கொடுக்கிறேன். ஆனால் என்னை ஈர்ப்பதற்குத் தகுந்தாற்போல் எவன் ஒருவன் தொண்டு செய்கிறானோ அவனுக்கு அந்த அருள் வேகமாகச் செல்கிறது. அவ்வாறு அம்மாவை ஈர்க்கும் வகையில் உன் தொண்டு அமைந்தால் உன் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமடா மகனே!” என்றாள் அன்னை. “அம்மா…..” என்று இழுத்தார் அவர். “தொண்டு செய்! தொடர்ந்து செய்! உத்தரவு” என்றாள் அன்னை.

]]>